யார் இந்த இயேசு?
நல்ல ஆயன் !
'ஆயன்'என்னும்
விவிலிய உருவகம் நமக்கு நன்கு அறிமுகமான ஒன்று. இறைவனை ஆயராகக் காணும்
மனநிலை இஸ்ரயேல் மக்களின் நாடோடி வாழக்கை அனுபவத்திலிருந்து பிறந்தது.
நாடற்றவர்களாய்த்
திரிந்த இஸ்ரயேலர்களை வழிநடத்தி, பாலும் தேனும் பொழியம் கானான் நாட்டுக்கு
ஆயராக அழைத்துச் சென்ற மோசேதான் இஸ்ரயேலரின் முதல் ஆயன் எனச் சொல்லப்படத்
தகுதி பெற்றவர்.
மோசேக்குப் பின் ஆயன்
என்னும் பட்டத்தைப் பெற்றவர் தாவீது அரசர். உண்மையிலேயே தாவீது சிறு
வயதில் ஆடுகளை மேய்த்த ஓர் இடையர்தான். பிற்காலத்தில், அரசராகத்
திருப்பொழிவு பெற்றபின், இஸ்ரயேல் மக்களுக்கு ஆயராக, தலைவராக இருந்து
வழிநடத்தினார்.
தாவீது அரசர் இறைவனை ஓர்
ஆயராக அனுபவித்தவர். அந்த இறை அனுபவத்தின் வெளிப்பாடுதான் அவர் இயற்றிய
'ஆண்டவரே என் ஆயர்;: எனக்கேதும் குறையில்லை' என்னும் 23ஆம் திருப்பாடல்.
யாவே இறைவன் பாதுகாப்பு தருபவராகவும், பசும்புல்லும், குளிர்நீரும் தந்து
பராமரிப்பவராகவும், புத்துயிர் ஊட்டுபவராகவும் இத்திருப்பாடலில்
கொண்டாடப்படுகின்றார். இந்த அனுபவத்தை இஸ்ரயேல் மக்கள் அனைவரும்
பாலைவனத்தில் பெற்றிருந்தனர். அவர்களுக்கு மன்னாவும், குடிநீரும் தந்து
பாதுகாப்புடன் உரிமை நாட்டுக்கு அழைத்துச் சென்றார் யாவே இறைவன்.
புதிய
ஏற்பாட்டில் இயேசு 'நல்ல ஆயன் நானே'(யோவா 10: 14)என்று கூறி, ஆயனாகத்
தம்மையே அறிமுகப்படுத்திக்கொள்கிநார். எத்தகையை விதங்களில் அவர் ஆயனாக
செயல்பட்டார் என்னும் ஆய்வு பல தரவுகளைத் தருகிறது.
1. ஆயன் அறிகின்றார்:
ஓர் ஆயன் தன் மந்தையிலுள்ள அனைத்து ஆடுகளையும் நன்றாக அறிந்திருப்பதுபோல,
இயேசுவும் நம்மை அறிகின்றார். 'தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும்
தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்.
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன'(யோவா 10: 14-15).
2. ஆயன் பரிவுகொள்கின்றார்: ஆயன்
தனது ஆடுகளின்மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றார். இயேசுவின் அக்கறையை
மாற்கு நற்செய்தியாளர் நன்கு பதிவுசெய்துள்ளார். பாலை நிலத்தில் இயேசு
'பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல்
இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக்
கற்பித்தார்'(மாற் 6:34)என்று வாசிக்கிறோம். பரிவின் முதல் வெளிப்பாடாகத்
தமது வார்த்தைகளை அறிவித்தார்.
3. ஆயன் உணவு தருகிறார்: அந்தப் பரிவின் அடுத்த வெளிப்பாடாக உணவின்றித் தவித்த ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தார்.
4. பாதுகாப்பு தருகிறார்: 'நீர்
என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்;சிடேன். உம் கோலும் நெடுங்கழியும்
என்னைத் தேற்றும்'என்கிறது திருப்பாடல் 23. இயேசுவும் தன் சீடர்களுக்குப்
பாதுகாப்பு தந்தார். அவர்களின் அச்சத்தைப் போக்கினார். 'சிறு மந்தையாகிய
நீங்கள் அஞ்சவேண்டாம்'(லூக் 12:32)என்ற சொற்கள் அவர் தரும் பாதுகாப்பை
எடுத்துரைக்கின்றன.
5. உயிரைத் தந்தார்:
நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் கொடுக்க முன் வருவார் என்பது
இயேசுவின் கருத்து. அதை அவர் சொல்லவும் செய்தார். ஆடுகளுக்காக 'எனது
உயிரைக் கொடுக்கிறேன்.' (யோவா 10: 14-15). சொன்னதை செய்தும் காட்டினார்.
6. ஆடுகளின் எதிர்காலம்: எக்காலமும்
தம் சீடரோடு இருக்க இயலாது என்பதனால், தனக்குப் பதிலாளர்களாக புதிய
ஆயர்களை நியமித்தார் இயேசு. தலைமை ஆயராக அவர் ஏற்படுத்திய பேதுருவிடம்
'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' 'என் ஆடுகளை மேய்''என் ஆடுகளைப் பேணி
வளர்' (யோவா 21:15,16,17)என்று மும்முறை மொழிந்தார்.
7. ஆடுகளுக்கான கனவு: பிளவுபட்டுக்
கிடக்கும் சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்பதே இயேசுவின் கனவாக இருந்தது.
எனவேதான் இயேசு கூறினார்: 'ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை
ஏற்படும் ' (யோவா 10:16)அந்தக் கனவை நிறைவேற்றி வைப்பது இன்றைய ஆயர்களின்
பொறுப்பாகும்.
நல்ல ஆயனான இயேசு தனது
மேய்ப்புப் பணியை அவரது வாரிசுகளான ஆயர்களிடம் விட்டுச் சென்றுள்ளார்.
அவர்கள் இயேசுவைப்போல மேற்கண்ட பணிகளை நல்முறையில் நிறைவேற்றி நல்ல
ஆயர்களாகத் திகழவேண்டும். தலைமை ஆயரான புனித பேதுரு தமது திருமடலில்
'உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப்
பேணுங்கள்' (1பேது 5 :2) என்று வழங்கிய அறிவுரையின்படி மேய்ப்புப் பணியில்
ஈடுபடவேண்டும். நல்லாயனாம் இயேசுவின் மந்தையாகிய நாம் அவரைப் பின்பற்றி
அவர்காட்டும் வழியில் செல்வோம்
நன்றி - தந்தை குமார்ராஜா –